மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் மூன்று கோட்டங்களையும் 67 பாடசாலைகளையும் கொண்டியங்கும் வலயமாகும். இந்த வலயத்தில் காணப்படும் பாடசாலைகள் அனைத்தும் கஸ்ட மற்றும் அதிகஸ்ட வகைக்குள் அடங்கும் பாடசாலைகளாகக் காணப்படுகின்றன. 14,953 மாணவர்கள் எமது வலயத்தில் தற்போது உள்ளனர்.

 

2006இல் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக எமது வலயத்திற்குட்பட்ட கிராமங்களிலிருந்து அனைத்து மக்களும் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு நகரப் பகுதிகளுக்குச் சென்றனர். இம்மக்கள் மீண்டும் 2008இல் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்களுள் இப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த வசதிபடைத்தோர் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு நகரப் பகுதிகளில் நிரந்தரமாகவே தங்கிவிட மீளக் குடியேறியோர் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களாகக் காணப்படுகின்றனர். அத்தோடு இப்பகுதிகளில் இருந்து வெளியேறிய ஆசிரியர்கள் பலர் நிரந்தரமாகவே இடமாற்றம் பெற்றுச் சென்றமையால் எமது வலயத்திலுள்ள பாடசாலைகளில் ஆரம்பக்கல்வி பாதிக்கப்பட்டு வந்துள்ளது. மூளைசாலிகளின் வெளியேற்றம் எமது வலயத்தின் கல்வி விருத்தியில் பெரும் தாக்கத்தினைச் செலுத்தியுள்ளதுடன் அது இன்னும் தொடர்கின்றது.

 

இந்நிலையில் எமது வலயத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் எழுத்தறிவு மட்டத்தினை அறியும் முகமாக 2017இல் ஒவ்வொரு பாடசாலையிலும் அப்பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களைக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி பெறப்பட்ட தகவல்கள் 15% எழுத்தறிவு வீழ்ச்சியைக் காட்டின. இதனால் எழுத்தறிவு விருத்திச் செயற்பாடுகள் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும் ஆசிரியர்கள் தமது நாளாந்தக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு முக்கியம் கொடுக்க வேண்டி இருந்தமையால் எழுத்தறிவில் இடர்படும் மாணவர்களை கையாள்வதற்குப் போதிய நேரத்தை ஒதுக்கிக் கொள்ளவில்லை. இதனால் பாடசாலைகளில் அத்திட்டம் பயனளிக்கவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இத்திட்டத்தினை வலயக்கல்வி அலுவலகம் தற்போது முன்னெடுத்து வருகின்றது. இத்திட்டம் பாடசாலை நேரத்தில் பயிற்றுவிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

 

தெரிவு செய்யப்பட்ட 22 பாடசாலைகளுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமைய தொண்டர் ஆசிரியர்கள் அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டனர். அவர்களுக்கு எமது வலயக்கல்வி அலுவலக வளவாளர்களினால் 02 நாட்பயிற்சிச் செயலமர்வுகள் நடாத்தப்பட்டதுடன் பெறுமதியான ஆசிரியர் கையேடுகளும் தயாரித்து வழங்கப்பட்டன.

இதன்படி 23.04.2018 அன்று பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

தொண்டர் ஆசிரியர்களுக்கு எழுத்தறிவு மட்டம் 1,2,3 க்கு உட்பட்ட மாணவர்கள் மாத்திரம் வழங்கப்பட்டதுடன் அவர்களது மட்டங்களை அதிகரிக்கச் செய்யும் நிலைக்கு ஏற்ப கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 22 பாடசாலைகளில் 08 பாடசாலைகளுக்கான கொடுப்பனவினை யாழ் இந்துக் கல்லூரி விக்டோரியா பழைய மாணவர் சங்கத்தினர் வழங்க முன்வந்துள்ளனர். பல்வேறு தரப்பினருடனும் நீண்ட நாட்கள் தொடர்பு கொண்டு வெற்றி கிடைக்காத நிலையில் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் உதவ முன்வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இச் செயற்றிட்ட நிறைவுவரை எமக்கு உதவி வழங்க முன்வருமாறு யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களை வேண்டி நிற்கின்றோம். அத்தோடு எமது வலயத்திலுள்ள ஏனைய பாடசாலைகளுக்கும் இச் செயற்றிட்டம் விரிவாக்கப்படுவதற்கு உதவிகளையும் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம் எமது வலயத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் எழுத்தறிவுவிருத்தியின்மை தொடர்பான சாவால்களைத் தாண்டி வெற்றிநடை போட முடியுமென உறுதியாக நம்புகின்றோம்.

 

பாடசாலைகள் விபரம்

  • Bt/Bw/Karayakkantivu Ganesha Vid
  • Bt/Bw/Kayanmadu GTMS
  • Bt/Bw/Navatkadu Namagal Kanista Vid
  • Bt/Bw/Panchenai Pari Vid
  • Bt/Bw/Pavatkodichenai Vinayagar
  • Bt/Bw/Thandiyadi GTMS
  • Bt/Bw/Kothiyapulai Kalaivani Vid
  • Bt/Bw/Eachantivu RKM Tamil Vid